வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிய முறையில் தூய்மைப்படுத்தும் பணிகளை அக்டோபர் 1 முதல் செயல்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே. இந்த திட்டத்தை ‘‘ஸ்வச்சதா ஹை சேவா’’வின் கீழ் டெல்லி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று (அக்டோபர் 1) தொடங்கி வைத்தார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் வெறும் 14 நிமிடங்களில் அத்தனைப் பெட்டிகளையும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
எப்படி 14 நிமிடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கேள்வி எழலாம். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பொறுத்தவரை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் அதிவேகமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஞ்சினில் மட்டுமின்றி ஒவ்வொரு பெட்டியிலும் புதுவிதமான டெக்னாலஜி வசதியுடன் மோட்டார் இருக்கின்றன. இதனால் ரயிலின் சக்கரம் அல்லது பிரேக் பழுதானால் ரயிலை நிறுத்த வேண்டியதில்லை. அதேசமயம் ரயிலின் வேகம் குறைந்துவிடும்.
இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தூய்மைப்படுத்த 45 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனை புதிய முறையின் படி வெறும் 14 நிமிடங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பெட்டிக்கும் தலா 3 தூய்மை பணியாளர்கள் களமிறக்கி விடப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் 100 சதவீதம் பக்காவாக வேலைகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக உபகரணங்கள் மூலம் கிடுகிடுவென பணிகளை செய்து முடித்து விடுவார்களாம். தற்போதுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 அல்லது 16 பெட்டிகள் இருக்கின்றன. பெட்டிகள் 3 பேர் வீதம் 14 முதல் 48 ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் (14 நிமிடங்களில்) வேலைகளையும் முடித்து விடுவர்.
இந்த விரைவு தூய்மை திட்டத்தின் பின்னணி குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இந்திய ரயில்வே தனது தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது. உலக நாடுகளில் சிறப்பு வாய்ந்த ரயில்வே துறையின் செயல்பாடுகளில் இருந்து உத்வேகம் பெற்று அவற்றை இந்தியாவிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ஜப்பானில் புல்லட் ரயிலை வெறும் 7 நிமிடங்களில் சுத்தம் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர். இது சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான நடைமுறையாகும். ஜப்பான் என்றாலே நேர மேலாண்மையை சரியாக கடைபிடிக்கும் நாடு என்பது பலருக்கும் தெரியும்.
அதன்படி புல்லட் ரயிலில் ஏழே நிமிடங்களில் தூய்மை பணிகளை முடித்து ரயில் புறப்படுகின்ற நேரங்களிலேயே சிறிய தாமதம் கூட ஏற்படாமல் பார்த்து கொள்கின்றனர். இதை பின்பற்றியே 14 நிமிட க்ளீனிங் சர்ப்ரைஸ் நடைமுறையை இந்திய ரயில்வே கையிலெடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.