அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பரிசாக வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு புதிய அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் நான்காவது உலகத்தலைவர் ஆவார்.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பில் இந்தியா அமெரிக்கா இடையிலான இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘எங்கள் பயணம் ஒன்றாக’ (Our Journey Together) என்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில், இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்த ‘ஹவுடி மோடி’ மற்றும் ‘நமஸ்தே டிரம்ப்’ பேரணிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ‘‘மிஸ்டர் பிரதம மந்திரி, நீங்கள் சிறந்தவர்’’ என்று டிட்ரம்ப் அந்த புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டுள்ளார். ‘நமது பயணம் ஒன்றாக’ என்ற இந்த புத்தகத்தின் அட்டைப் படத்தில் டொனால்ட் டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் இருந்து கையசைக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
டொனால்ட் டிரம்ப் எழுதிய இந்தப் புத்தகம், அவரது முதல் அதிபர் பதவியின் முக்கிய தருணங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் 320 பக்கத் தொகுப்பாகும். 50,000க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொண்ட ‘‘ஹவுடி மோடி’’ பேரணி 2019 இல் ஹூஸ்டனில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரம்ப் இருவரும் உரைகளை நிகழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2020ல் அகமதாபாத்தில் நடைபெற்ற ‘‘நமஸ்தே டிரம்ப்’’ பேரணியின் போது இரு தலைவர்களும் இந்தியா-அமெரிக்க உறவுகளின் மதிப்பை வலியுறுத்தினர். இந்த நிகழ்வுகளும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருவரது பிரத்யேக புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன.
‘எங்கள் பயணம் ஒன்றாக’ புத்தகத்தின் விலை அமேசானில் ரூ.6,000 என்ற விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இதன் விலை ரூ.6,873 ஆகும். டிரம்ப் ஸ்டோரில் இதன் விலை 100 டாலர்கள் ஆக உள்ளது.