சென்னை கொரட்டூரில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தின் மேல் இருக்கும் குடிநீர் தொட்டியை நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் சுத்தம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதன் பாதிப்பு சென்னையில் மிக அதிகமாகவே இருந்து. குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்துமே மழைவெள்ள நீரில் மூழ்கியது. இதனால் பள்ளிகள் கடந்த ஒரு வாரத்திற்கு பின்னர் நேற்று சென்னையில் (டிசம்பர் 11) திறக்கப்பட்டது.
அப்படி திறக்கப்பட்ட சென்னை கொரட்டூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடத்தின் மீது உள்ள குடிநீர் தொட்டியை ஆபத்தான் முறையில் பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்தனர். இது பற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை கொரட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், நான்காம் வகுப்பு மாணவர்களை வைத்து மொட்டை மாடியில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்துள்ள காணொலி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
மாணவ மாணவியரை, இது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. தமிழகம் முழுவதும் சிதிலமைடைந்து இருக்கும் சுமார் பத்தாயிரம் அரசுப் பள்ளிக் கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவோம் என்று சொல்லிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பலமுறை நினைவுபடுத்தியும் அதனைப் பற்றிப் பேசுவதே இல்லை.
அதற்கு மேலாக, அரசுப் பள்ளி மாணவர்களை கழிப்பறைகள் சுத்தம் செய்ய வைப்பது, ஆபத்தான உயரத்தில் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள், அரசுப் பள்ளி மாணவ மாணவியரை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்தி வருவதை வெளிப்படையாக்குகின்றன.
பல தலைவர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கிய அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது ரசிகர் மன்றப் பணிகள் நடுவே, தனது துறை ரீதியிலான பணிகளையும் கவனிப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.