இடைக்கால பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் குமார், தனி நாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 3 வது நாள் கூட்டம் இன்று (பிப்ரவரி 2) காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. டி.கே.சுரேஷ் குமார், தென்மாநிலங்கள் தனி நாடாக வேண்டும் என பேசியது குறித்து காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது பற்றி விளக்கம் அளித்தார். நாட்டை பிளவுப்படுத்துவது தொடர்பாக யார் பேசினாலும், அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் ஒன்றுதான், ஒன்றாக இருப்போம் என்றார்.
இடைக்கால பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்த எம்.பி. டி.கே.சுரேஷ் குமார், தென்னிந்தியாவுக்கு அனைத்து நிலைகளிலும் அனைத்து விவகாரங்களிலும் அநீதி இழைக்கப்படுவதாகவும் தனி நாடு கோர வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
எங்களுடைய பணம் எங்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். வளர்ச்சிக்கான எங்களுடைய பங்கு பணம், வட இந்தியாவுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. வருகிற நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்காவிட்டால் இந்தி பேசும் பகுதிகள் நம் மீது கட்டாயப்படுத்தும் சூழல் காரணமாக, தனி நாடுக்கான கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார். இதற்கு அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சோனியாவின் காங்கிரஸ் எப்போதுமே தேசத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்திலேயே கருத்துக்களை தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி., எப்படி தலைமைக்கு தெரியாமல் தனிநாடு கோரிக்கை பற்றிய கருத்து கூறியிருக்க முடியும் என பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.